திருமலை மாவட்டத்தில் வரலாற்றுச் சான்று பகரும் அகத்தியர் சிவலிங்க கோயில்.
இலங்கை வரலாற்றிலே கிழக்கு மாகாணம் தனியான வரலாற்றுச் சான்றுகளை தன்னகத்தே கொண்டமைந்த ஓர் மாகாணமாகும். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் இந்து கலாச்சார விழுமியங்களை பேணிப்பாதுகாத்த வரலாறுகள் தற்போதும் புலனாகின்றது. அதிலும் திருகோணமலை மாவட்டத்தில் கங்குவேலி எனும் இடத்தில் மிகவும் பழமை வாய்ந்த அகத்தியர் சிவலிங்க கோவில் அமையப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த வன்செயல் காரணமாக இவ்வாலயத்தின் வழிபாடுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. தற்போது அவ் ஆலயத்தின் நிருவாக சபையினர் ஒன்றிணைந்து ஆலயத்தினை புனரமைப்புச் செய்த திருவிழாக்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் புரதான வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டமைந்த கங்குவேலி அகத்தியர் ஆலயத்தினை கிழக்கு மாகாண முதல்வரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நேரில் விஜயம் செய்து பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது இவ்விஜயத்தின் போது மாகாண விவசாய கால்நடை அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜா அவர்களும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கங்கு கோயிலில் அமைந்துள்ள அப் புராதான ஆலயம் பல வரலாற்றுக் கதைகளோடு தொடர்புடையதாக அமைந்திருக்கின்றது. தொல் பொருள் ஆய்வினை மேற்கொள்ளும் பட்சத்தில் பல வரலாற்றுச் சான்றுகளை நாம் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும் ஆடி அமாவாசை தீர்த்தத்தினை கொண்டமைந்து திருவிழாக்களை நடாத்தி வந்திருந்த போதிலும் அண்மைக்காலமாக பூரண வழிபாடுகள் இடம்பெறாமல் இருப்பது அப்பிரதேச மக்கள் பெரும் கவலை கொள்கின்றார்கள். இவ்வாலயத்தின் சிறப்பு தலபுராணத்திலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தின் மகா சபைத் தலைவர் கனகசிங்கம், பொருளாளர் மதிவதணன், நிருவாக சபைத் தலைவர் தவராசா ஆகியோர் தற்போது ஆலயத்தை நிருவகித்து வருகின்றனர்.

